Sunday 18 March 2012

டுவிட்டர்கள், பிளாகர்கள் கவனத்திற்கு.

இது நேற்று டுவிட்டரில் சிலரின் விவாதத்திற்கு அளித்த பதில்.


நேற்று நாம் டுவிட்டரில் விவாதித்த சில விடயங்களுக்கு விளக்கம் தர இந்த மின்னஞ்ச்சலை அனுப்புகிறேன். கடந்த மூன்று நாட்களாக அதாவது சானல் 4 வீடியோவுக்கு பின் இந்த டுவிட்டரில் பலர் உணர்ச்சி பொங்க டுவிட்டுவதை காண முடிந்தது. அது கொஞ்சம் சந்தோசமாகவும் இருந்தது. ஆனால் இங்கு டுவிட்டிய பெரும்பான்மையினர் தங்கள் உணர்ச்சியை வெறும் கோபமாகவே வெளிப் படுத்தியிருக்கின்றனர். உதாரணத்திற்கு அதில் பலர் ராஜபக்சே, சோனியா, கருணா போன்றோரை திட்டுவதை மட்டுமே செய்தார்கள்.

இது போன்ற டுவிட்டுகள் இலங்கை போரின் போதும், சானல் 4 காட்சிகள் வெளியிடும் போதும் சில நாட்களுக்கு மட்டும் தொடர்வதை காண முடிகிறது. அதன் பின் இந்த டுவிட்டர் மீண்டும் மொக்கைகளின் களமாக மாறிப் போவதை நாம் அனைவருமே காண்கிறோம். இது போன்ற மனநிலைகள் "அந்நியன்" போன்ற படங்களை பார்த்து விட்டு வெளியில் வந்த பின் சில மணி நேரங்களுக்கு நம் மனதில் இருக்கும் உணர்ச்சியாக தான் வெளிப் படுகிறது. இதை நாம் ஒரு சுய இன்பம் என்று கூட வரையறுக்க முடியும். எனக்கு இந்த நாட்டின் மீதும், இந்த இனத்தின் மீது அக்கறை இருக்கிறது என்ற நிலையிலேயே அது தன்னிரைவடைகிறது.

இந்த டுவிட்டர், பேஸ்புக் போன்றவை நம் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் போல் ஆகி விடுகின்றன. அதாவது ஒரு சில நாட்களுக்கு நம் உணர்ச்சிகளை அதில் கொட்டி விட்டால் என்னால் முடிந்ததை நான் செய்து விட்டேன் என நம்மை அது தன்னிறைவடைய செய்கிறது. மேலும் இங்கு அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தான் பெரும்பாலும் முழங்குகிறது.

ஆனால் அந்த அமெரிக்க தீர்மானம் என்ன சொல்கிறது. அதை ஏன் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் படுகிறது போன்ற விவாதங்கள் அங்கு காண படுவதில்லை. இது அன்னா ஹசாறேவை ஆதரித்த மனநிலையை தான் காட்டுகிறது. உண்மையில் அமேரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் அங்குள்ள நம் தமிழ் உறவுகளுக்கு எதிரான ஒன்று. மேலும் அது ராஜபக்சேவை தப்பிக்க வைக்கும் வேலையையும் செய்கிறது.

அது சொல்வது என்னவென்றால் இலங்கையால் உருவாக்க பட்ட விசாரணைக் குழுவான "LLRC" சொல்வதை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்கிறது. இந்த LLRC இலங்கையில் போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை என்கிறது. இதன் மூலம் அமெர்க்கா கொலைகார ராஜபக்சேவை காப்பாற்றும் வேலையை தான் செய்கிறது.

அதே சமயம் ஐ.நா அமைத்த குழு அளித்த அறிக்கையில் ஓரளவுக்கு நேர்மை இருக்கிறது. அதாவது இந்த போர்க் குற்றங்களை கண்டுகொள்ளாத ஐ.நா வையே அது குறை கூறுகிறது. ஆனால் அந்த விசாரணைக் குழு அறிக்கையை அமேரிக்கா கிஞ்ச்சிதமும் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை.

போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையும் சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்பதாக இல்லை. அதன் மூலம் இலங்கையை அது தப்பிக்க வைக்கும் வேலையை தான் செய்கிறது.

இப்படி நாம் புரிந்து கொண்டு போராட வேண்டிய பல விடயங்களை பற்றி தெரிந்து கொல்ல கூட இந்த டுவிட்டரும் பேஸ்புக்கும் விடுவதில்லை. 140 எழுத்துகளில் நம் உணர்ச்சிகள் முடக்கப் படுகின்றன. தீர்மானம் என்ன என ஆராயாமல், விவாதிக்காமல், ஏன் அதில் என்ன இருக்கிறது என்பதை கூட தெரிந்து கொள்ள நாம் முயற்சிப்பதில்லை. வெறுமனே உணர்ச்சிபெருக்கை கொட்டி விட்டு அடுத்த வேலைக்கு போய் விடுகிறோம்.

சரி இங்கு பலருக்கு இதை தாண்டி என்ன செய்ய முடியும்? என்ற எண்ணம் வருகிறது. இது அடிப்படையில் அவர்களின் போராட்ட குணங்கள் மழுங்கி போயிருப்பதை தான் காட்டுகிறது. முதலில் பிரச்சினை என்ன? அதன் மூலம் என்ன? அது சரியா? தவறா? என்ற விவாதங்களை நடத்த இது போன்ற சமூக வலைத் தளங்களை பயன் படுத்துங்கள்.

அது குறித்த ஆய்வின் மூலம் ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் விடயங்களை போது மக்களிடம் நேரிடையாக சென்று பிரச்சாரம் செய்யுங்கள். பிரச்சாரம் என்றால் அரசியல் பிரச்சாரம் இல்லை. உங்கள் அருகாமை பகுதியில் உள்ள உழைக்கும் மக்களை சந்தித்து பேசுங்கள். அவர்களுக்கு புரிய வையுங்கள். நாளை ஒரு போராட்டம் என்றால் அங்கு நின்று போராடும் துணிவு அவர்களுக்கு தான் அதிகம். நம் டுவிட்டர்களுக்கு அல்ல.

உண்மையில் நீங்கள் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் எனில் இது தான் உங்களின் உணர்ச்சிகளை மக்களிடம் சேர்க்கும் வழிமுறை. ஈழப் போர் 60 ஆண்டுகால போராட்டம். அதில் கிடைக்காத நீதியை நாம் ஐந்து நாள் டுவிட்டுவதால் கிடைத்து விடும் என நினைத்தால் நாம் முட்டாள்களே!

சமூக வலைத் தளங்களை ஆக்க பூர்வமான முறையில் பயன் படுத்துவோம். தொடர்ந்து தொடர்பில் இருங்கள் தோழர்களே!

நன்றி,
வில்லங்கம்.

No comments:

Post a Comment